Wednesday, May 3, 2017

உயிர்காக்கும் தலைக்கவசம்...

உயிர்காக்கும் தலைக்கவசம்...


இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு ஆபத்பாந்தவனாக விளங்குவது ‘ஹெல்மெட்’ எனப்படும் தலைக்கவசமே. அது தலையை காக்கும் கவசம் மட்டும் அல்ல உயிர்க்கவசமும் கூட. ஹெல்மெட் அணிந்திருந்தால் விபத்து ஏற்படும் போது பெரிய அளவிலான சேதத்திலிருந்து தப்பிக்கலாம் என்பதாலேயே, அது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. அதற்கேற்ப விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே தான் போகிறது.
பொதுவாக, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள்தான் அதிகளவில் விபத்தில் சிக்குகின்றனர். அவ்வாறு ஏற்படும் இரு சக்கர வாகன விபத்துகளின் போது பெரும்பாலும் தலையில் தான் அடிபடுகிறது. அதிலும், ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகள் தான் பெரும்பாலான சாலை விபத்துகளில் தனது உயிரை இழக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல், முகம் மற்றும் தண்டுவடப் பகுதி, தலை, கழுத்து பகுதி, மூளை ஆகியவற்றில் அடிபடும் போது பெரும்பாலான வாகன ஓட்டிகள் உயிரிழக்கின்றனர் அல்லது பலத்த காயங்களுடன் நடை பிணமாகின்றனர்.
ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என சட்டம் மற்றும் தீர்ப்புகள் இருந்தும், சாலைகளில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்பவர்களை பார்க்க முடிகிறது.
பலர் ஹெல்மெட் வாங்கி வைத்துக்கொண்டு அதை தலையில் அணியாமல் இருசக்கர வாகனத்தின் கண்ணாடியிலேயோ, பெட்ரோல் டேங்க்கின் மேலேயோ அல்லது வாகனத்தின் பின்புறத்திலோ வைத்துக்கொண்டு செல்கின்றனர்.
ஏன் அவ்வாறு செல்கின்றனர்?
அதிலும் சிலர், விலை உயர்ந்த தரமான ஹெல்மெட்டை வாங்கி தலையில் அணிந்து கொண்டு, அதை லாக் செய்யாமல் பயணிக்கும் போது சிறு விபத்து நிகழ்ந்தாலும், தலையில் இருந்து ஹெல்மெட் கழன்று விழுந்து தலையில் காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே, செய்வதை திருந்த செய்வோம், அதன் முழு பலனை அனுபவிப்போம். ஹெல்மெட் அணிவது உங்களது பாதுகாப்பிற்காகவும், உங்களையே நம்பி இருக்கும் உங்கள் குடும்பத்தினருக்காகவுமே.. தவிர போலீசாரின் சோதனையில் இருந்து தப்பிப்பதற்காக மட்டுமே என்று நினைத்து அணிய வேண்டாம்.
ஹெல்மெட் வாங்கும் போது சில முக்கிய விஷயங்களை நம் நினைவில் கொள்வது நல்லது. அதென்ன.. முக்கிய விஷயம்? முக்கியம் தான்..  ஹெல்மெட் 200 ரூபாய் முதல் கிடைக்கிறது… ஆனால் இதுபோன்ற ஹெல்மெட்களால் பயன் இல்லை.
ஏனெனில், மனித உயிர் விலை மதிப்பற்றது. எனவே, உயிர் காக்கும் விஷயத்தில் பணம் மிச்சம் என நினைத்து தரம் குறைந்த ஹெல்மெட்டை வாங்க வேண்டாம். ஐ.எஸ்.ஐ முத்திரை கொண்ட தரமான ஹெல்மெட்டையே வாங்கவும்.
குறைந்த விலையில் கிடைக்கும் தரம் குறைந்த ஹெல்மெட் போலீசாரிடமிருந்து தப்பிக்க மட்டுமே உதவுமே தவிர உயிர் காக்க பயன்படாது. ஹெல்மெட் மூன்று வகையான மாடல்களில் உள்ளன. தலை மற்றும் முகம் முழுவதையும் மூடும் வகையில் உள்ள ஹெல்மெட், தலையை மட்டும் மூடும் வகையில் உள்ள ஹெல்மெட், பாதிதலையை மட்டும் மூடும் ஹெல்மெட்.
ஹெல்மெட் தேர்வு செய்யும் போது நமது தலைக்கு சரியாக பொருந்துவதை பார்த்து தேர்வு செய்ய வேண்டும். ஹெல்மெட்டில் உள்ள கண்ணாடி துல்லியமான பார்வை கொண்டதாக பார்த்துக்கொள்ள வேண்டும்.
ஹெல்மெட் வாங்கும்போது தாடையோடு சேர்த்து லாக் செய்யும் தன்மை கொண்ட ஹெல்மெட்டே வாங்க வேண்டும். தலை மற்றும் முகத்தை முழுவதுமாக மறைக்காத ஹெல்மெட்டை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதிலும், தலை மற்றும் தாடையை முழுவதுமாக மறைக்கும் ஹெல்மெட்டை பயன்படுத்துவது நல்லது.
ஹெல்மெட் அணியும் போது அது மிகவும் இறுக்கமாக இருந்தால் தலைவலி, கழுத்துவலி ஏற்படும். ஹெல்மெட் உங்கள் தலைக்கு மிகவும் சரியாக பொருந்தும்படி பார்த்து தேர்வு செய்ய வேண்டும். அது மிகவும் இறுக்கமாகவோ அல்லது பெரிதாகவோ இருக்கக்கூடாது.
முதலில் ஹெல்மெட் அணியும் போது சிலருக்கு தலைவலி ஏற்படுவது உண்டு. அவ்வாறு தொடர்ந்து தலைவலி ஏற்பட்டால் அது உங்களுக்கு பொருத்தமில்லாத ஹெல்மெட் என்று தெரிந்து கொள்ளலாம்.
நல்ல மிளிரும் வண்ணம் கொண்ட ஹெல்மெட்டை தேர்வு செய்வது நல்லது. இது இருட்டில் செல்லும் போது மற்றவர்களால் நம்மை எளிதாக அடையாளம் காண முடியும்.
எனவே பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் சிறிது தூரம் பயணம் சென்றhலும் ஹெல்மெட் அணிந்து பயணம் செய்யுங்கள். ஏனென்றhல் விபத்து என்பதே எதிர்பாராத நேரத்தில் எதிர்பாராத இடத்தில் நடப்பது தான்.
வீட்டில் இரு சக்கர வாகனத்தை எடுக்கும் போதே ஹெல்மெட் அணியும் பழக்கம் இயல்பாகவே வர வேண்டும். வண்டியில் குழந்தைகளை உடன் அழைத்துச் செல்லும் போது அவர்களுக்கும் ஹெல்மெட் அணிந்து கூட்டிச் செல்லுங்கள்.
வெளியே சென்றவருக்கு விபத்து ஏற்பட்டால் மனைவி கணவனை இழக்கலாம், ஒரு தாய் தன் மகனை இழக்கலாம், குழந்தைகள் தந்தையை இழக்கலாம். நம் இழப்பு நம்மோடு முடிந்து விடுவது இல்லை. நம்மை சார்ந்துள்ளவர்களை நம் இழப்பு எவ்வாறு பாதிக்கும் என்று ஒரு நிமிடம் யோசித்தால் போதும், உயிர்காக்கும் தோழனான ஹெல்மெட்டை நிச்சயம் மறக்கமாட்டீர்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக, மிதமான வேகத்தில் செல்லுங்கள். விபத்து ஏற்பட்டாலும் தலைக்கு வந்தது ஹெல்மெட்டோடு போய்விடும்.
ஹெல்மெட் அணிந்திருந்தால் விபத்து ஏற்படும் போது பெரிய அளவிலான சேதத்திலிருந்து தப்பிக்கலாம் என்பதாலேயே, அது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விஷயத்தில் தங்கள் உயிரை காக்க மக்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்.

இணைந்திருங்கள்... இரா.ஜhன்சிராணி கண்ணன்..

No comments:

Post a Comment

  தியாகி சூறாவளி பொ.லெட்சுமணன் இந்திய விடுதலைக்காக போரிட்ட தியாகிகள் பலர் தமிழகத்தி;ல் இருக்கையில் சிவகங்கை சீமையின் கோட்டையாம் தேவகோட...