Wednesday, May 3, 2017

வாகன புகை வாழ்க்கைக்கு பகை

கோவை நகரில் காற்று மாசு அதிகரிப்பு... 

வாகன புகை வாழ்க்கைக்கு பகை 

குழந்தைகள், முதியோர் பெரும் பாதிப்பு


கோவையில் ஒருபுறம் நாளுக்கு நாள், வாகனங்களில் இருந்து கரும்புகை அளவு கூடிக் கொண்டே வருகிறது. மறுபுறம், வாகன புகை பரிசோதனை சான்றிதழ் பெறுதல் என்பது வெறும் கண்துடைப்பாக மாறிவருகிறது. இதனால், காற்று மாசு அதிகரித்து, குழந்தைகள், முதியோர் சுவாசப் பிரச்னைகளால் அவதிப்படுவது அதிகரித்துள்ளது.
கோவை நகரில் சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். பல லட்சம் மக்கள், தினமும் வந்து செல்கின்றனர். இத்தனை லட்சம் மக்களுக்கு, மெட்ரோ ரயில், மின்சார ரயில் போன்ற மக்கள் போக்குவரத்து இல்லாததால், தனிநபர் வாகனங்கள், ஆண்டிற்கு ஆண்டு அதிகரித்து வருகின்றன.
இவற்றைத் தவிர்த்து, மக்கள் பயன் பாட்டுக்கான பஸ்கள், டாக்சி, ஆட்டோக்கள் போன்ற வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே
இருக்கிறது.
அதேபோன்று, நகரின் வர்த்தகம் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சரக்கு வாகனங்களும், புற்றீசலாக பெருகிக் கொண்டிருக்கின்றன. இதன் காரணமாகவே, சென்னைக்கு அடுத்ததாக கோவையில் நான்கு வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படுகின்றன. அரசுக்கும், அதிகாரிகளுக்கும் வருவாயை வாரித் தந்து கொண்டிருக்கின்றன. இவர்களின் முக்கியக் கடமைகளில் ஒன்று, வாகனங்களில் வெளி வரும் புகையின் அளவைக் கண்காணித்து, கட்டுப்படுத்துவது.
ஆனால், அந்த கடமையை அவர்கள், காசுக்காக கண்டு கொள்ளாமலிருப்பதன் விளைவாக, நகரில் காற்றின் மாசு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதில், அரசு பஸ்கள் தான், முதலிடத்தில் இருக்கின்றன. கோவை நகரிலுள்ள 17 அரசு போக்குவரத்து கழக பணி மனைகளிலிருந்து 1,282 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாகனங்கள், மற்ற வாகன ஓட்டிகளை மிரட்டும் அளவுக்கு கரும்புகையை கக்கியபடியே செல்கின்றன.
தனியார் பேருந்துகளிலும், 20 சதவீத வாகனங்களில், அரசு பஸ் அளவிற்கு இல்லாவிட்டாலும், அனுமதிக்கப்பட்ட அளவை விட, பல மடங்கு அதிகமாகவே புகையை வெளித்தள்ளுகின்றன. இவற்றுக்கு அடுத்ததாக, லாரிகளும், ஆட்டோக்களும், சரக்கு ஆட்டோக்களும், வாடகை டாக்சிகளும் புகை கக்கும் போட்டியில் முந்திக் கொண்டிருக்கின்றன. நகரிலுள்ள 10 லட்சத்துக்கும் அதிகமான டூவீலர்களைக் கணக்கிட்டால், அவை கக்கும் புகையையும் சாதாரணமானவை என ஒதுக்க முடியவில்லை.
இப்படியாக, பல விதமான வாகனங்களும், அளவுக்கு அதிகமாக கரும்புகையைக் கக்கி, காற்றை வெகுவாக மாசுபடுத்தி வருகின்றன. காற்றில் கலக்கும் கார்பன் அளவைக் குறைக்கும் ஆற்றல் படைத்த மரங்களும், நகரில் தாறுமாறாக வெட்டப்பட்டுள்ளன. முரண்பட்ட இந்த வளர்ச்சியால், நகரில் வசிக்கும் மக்களுக்கு சுவாசம் சம்மந்தப்பட்ட நோய் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், ஆஸ்துமா, நுரையீரல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு வியாதிகளால் தாக்கப்படுகின்றனர்.
தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர் கூறுகையில், கோவை நகரில், ஆஸ்துமா பாதிப்பு அதிகமாகி வருகிறது. ஒரே காரணம், வாகனப் புகை தான். குறிப்பிட்ட சில பகுதிகளில், தொழிற்சாலை புகை பாதிப்பு இருப்பதை மறுப்பதற்கில்லை; ஆனால், நகரம் முழுவதும் ஆஸ்துமா பாதிப்புக்குள்ளான குழந்தைகள், அதிகளவில் சிகிச்சைக்கு வருவதைப் பார்க்கும்போது, வாகன புகையே பிரதான காரணமாகத் தெரிகிறது என்றார்.
மோட்டார் வாகன சட்டப்படி, அனைத்து வாகனங்களும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புகை பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் பெறவேண்டும். இந்த சான்றிதழ் இல்லாத கனரக வாகனங்களுக்கு 1,000 ரூபாயும், இலகுரக வாகனங்களுக்கு 500 ரூபாயும் அபராதம் விதிக்க முடியும். ஆனால், வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள், புகை சான்றிதழுக்கு போதிய முக்கியத்துவம் தருவதில்லை. எனவேதான், கரும்புகையை கக்கிச்செல்லும் வாகனங்கள் அதிகரித்து, மாசடைந்த நகராக கோவை மாறி வருகிறது.
இதுகுறித்து, புகை பரிசோதனை மையம் நடத்துபவர் ஒருவர் கூறுகையில்,  வாகனங்களின் பிஸ்டன் சுத்தம் செய்யாமலும், இன்ஜpன் ஆயில் மாற்றhமலும் இருப்பதே, கரும்புகை வரக் காரணமாகும். நகரிலுள்ள இத்தனை லட்சம் வாகனங்களுக்கு 27 புகை பரிசோதனை மையங்கள் மட்டுமே உள்ளன. இதிலிருந்தே, புகைபரிசோதனை சான்றிதழ்களுக்கு, ஆர்.டி.ஓ.,க்கள் தரும் முக்கியத்துவம் தெரியும் என்றhர். 
நகரில் வாகனங்கள் கக்கும் புகையைப் பார்த்தால், இது அப்பட்டமான உண்மையாகத் தெரிகிறது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கும், மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்களுக்கும் சம்பாதிப்பதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. இந்த விஷயத்திலும் காசை வாங்கிக்கொண்டு, காற்றில் விஷத்தைப் பரப்ப அனுமதிப்பது, வருங்கால சந்ததிக்குச் செய்யும் மாபெரும் துரோகமாகும். இனியாவது, வாழ்க்கைக்கு பகையாகும் புகையைக் கட்டுப்படுத்த, இவர்கள் களம் இறங்குவார்கள் என்று நம்புவோம்.

No comments:

Post a Comment

  தியாகி சூறாவளி பொ.லெட்சுமணன் இந்திய விடுதலைக்காக போரிட்ட தியாகிகள் பலர் தமிழகத்தி;ல் இருக்கையில் சிவகங்கை சீமையின் கோட்டையாம் தேவகோட...