தியாகி சூறாவளி பொ.லெட்சுமணன்
இந்திய விடுதலைக்காக போரிட்ட தியாகிகள் பலர் தமிழகத்தி;ல் இருக்கையில் சிவகங்கை சீமையின் கோட்டையாம் தேவகோட்டையில் போரிட்ட தியாகிகளில் ஒருவரும், மூத்த பத்திரிக்கையாளரும், முதுபெரும் பெரியார் தொண்டரும், தனது தள்ளாத வயதிலும் தளராத தேசப்பற்றும், மொழிப்பற்றும் கொண்டவர் சூறாவளி லெட்சுமணன்.
நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும் தனது சுதந்திர வேட்கையையும், அதற்காக அவர் எடுத்த ஆயுதமாம் எழுத்தின் மீதான காதலும் இன்று வரை தணியவில்லை.
தள்ளாத வயது என்று நாம் சொன்னாலும், தளரவில்லை அவரது தன்னம்பிக்கை. தன்னை கிறுக்கன் என்று சொல்பவர்களை தனது ஆயுதமாம் தமிழால் கீறல் பேர்வழிகள் எனக்கூறி துச்சமென அவர்களை தூக்கியெறிந்து தன்னம்பிக்கை நடைபோடுபவர். நமது தெற்கு சீமை தந்த தங்க புதல்வன் நமது முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவர்கள் தனது இறப்பை சரித்திரமாக உலகிற்கு விட்டுச்சென்றது போல தனது வாழ்வையும் தன்னோடு போரிட்டு மடிந்த தியாகிகளது தியாகத்தையும் சரித்திரத்தில் நிரந்தரமாக பதிவு செய்ய வேண்டும். அதைக்கண்ட இளைஞர்களது இதயத்தில் நமது தேசத்தின் மீதான காதல் துளிர் விட்டு ஆணி வேராய் ஊடுருவி அகிலமெங்கும் விருட்சமாக விசாலமாக பரவி அதன் விழுதுகளில் வருங்கால தலைமுறைகள் ஊஞ்சலாட வேண்டும் என்ற கனவுகளுக்கு சொந்தக்காரர்.
பார்க்க பாட்டாளி மகனாய் தெரிந்தாலும் பரந்த மனதில் செல்வந்தர், வயதோ 92 ஆனால் எண்ணமோ 29, காலத்தால் முதியவர் கருத்தில் முதுபெரும் கலைஞர், தனது கருத்திலோ, எண்ணத்திலோ சிறிதும் தளர்வு கொள்ளாதாவர், தளர்த்திக் கொள்ளாதவர். தனது பெயருக்கேற்ப சூறாவளி தான் இன்றும், என்றும்…
சுதந்திரம் என்பது சுதந்திரதினத்தன்று இனிப்புகளை பரிமாறிக் கொள்வதும், மரியாதை செய்வதிலும் அல்ல: சுதந்திரம் என்பது பல மாமனிதர்களின் தியாகத்தால் கிடைத்தது என்றுணர்த்தும் விதமாக தனது எழுத்தால் உலகம் உணர செய்ய வேண்டும் என்பதற்காக சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் என்ற புத்தகத்தை தனது நீதி நிலையம் பதிப்பகத்தின் வாயிலாக துணிந்து வெளியிட்டவர். சுதந்திர போராட்ட நிகழ்வுகளில் மறைக்கப்பட்ட மற்றும் மறக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை, தியாகிகளை பற்றிய தொகுப்புகளை நூலாக வெளியிட்டவர்.
ஏறத்தாழ முன்னூறு ஆண்டுகள் போராடி வெள்ளையனிடம் பெற்ற சுதந்திரத்திற்காக நடைபெற்ற போராட்டங்களில் பங்குபெற்ற தியாகிகளில் ஒருவரும், ஓய்வறியா உழைப்பாளியான தியாகி சூறாவளி என்ற லெட்சுமணன் 1942 ல் நடைபெற்ற ஆகஸ்ட் போராட்ட தியாகி. நாடு விடுதலை அடைந்தபிறகு, பெரியார் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, பகுத்தறிவாளராக இன்றும் தன்னை பொது வாழ்க்கையில் ஈடுபடுத்திவரும் இவர் ஏராளமான நூல்களுக்குச் சொந்தக்காரர்.
நமது தலைமுறையில் தொலைந்து போய்விட்ட நாட்டுப்பற்று, ஒருமைப்பாடு, தியாகம், பொதுநலம், சத்தியம், தேசியம், நேர்மை இவற்றை எல்லாம் கொழுந்து விட்டெறியச் செய்யும் விதமாக வளமான வாழ்வு என்ற நூலில் 38 தலைப்புகளில் கட்டுரை எழுதியுள்ள இவர், தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சம்மேளனத்தின் மூத்த பத்திரிக்கையாளராகவும் வலம் வந்தார். மேலும், அச்சங்கத்தின் முன்னாள் தலைவரான திரு.இரவீந்திரதாஸ் அவர்களின் உண்மையான நண்பனாகவும் திகழ்ந்தார். சுயமரியாதை இயக்கத்தில் பெரியாரின் தொண்டராக விளங்கிய இவர் இலக்கியச் செம்மல், எழுத்துவேந்தர் என்ற பெயர்களுக்குச் சொந்தக்காரர். உலகத்தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் பொற்கிழி பெற்ற எழுத்தாளரான இவர் சிறுவர், சிறுமிகளுக்கான பச்சைக்கிளி, தீபாவளி பரிசு, மகாபுத்திசாலி, ஏமாறாதே என்ற புத்தகங்களை வெளியிட்டுள்ளார். அதே போல் விதியா, சதியா, இதுவா புராணம், இரத்தக்கறை, நாடுகாத்த நல்லவர்கள், கல்லினுள் தேரையோ (நாடகம்), சும்மாவரவில்லை சுதந்திரம் என்ற பல நூல்களை நீதிநிலையம் என்ற அவருடைய பதிப்பகம் மூலம் வெளியிட்டுள்ளார். தினகரன், தமிழ்சுடர் போன்ற பத்திரிக்கைகளில் நிருபராக பணியாற்றி ஓய்வு பெற்று அதன் மூலம் வரும் பென்ஷனையே வாழ்வாதாரமாக கொண்டு தனது வாழ்க்கையை நடத்தி வரும் இவர் புதிய பார்வை, தமிழ் சுடர் பத்திரிக்கைகளில் 200க்கும் மேற்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். மேலும், அப்பச்சி மலர் என்ற மாத இதழ் ஆரம்பித்த காலம் முதல் 2018 வரை பல தலைவர்களை பற்றிய கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அதுமட்டுமில்லாமல் பல பத்திரிக்கைகளில் கவுரவ ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பல்கலைக்கழக மற்றும் விழா மேடைகளில் தனது உரையை நிகழ்த்திய இவரை பல நிகழ்வுகளில் சிறப்பு விருந்தினராகவும் கவுரப்படுத்தியுள்ளனர்.
தேவகோட்டை திரு.இராம.வெள்ளையன் காலத்திய திராவிட இயக்கத்து தோழரான லெட்சுமணன், சாதிப்பேயின் கோரத்தாண்டவம் நிகழக்கூடாது என்ற முயற்சியின் தேடலில் ஒத்துழைத்தவர் மற்றும் 17 ஆகஸ்ட் 1942ல் நடைபெற்ற தேவகோட்டை போராட்டத்தில் பங்குபெற்ற 82வது குற்றவாளி என யாழினி பதிப்பகம் வெளியிட்டுள்ள தேரும் போரும் நூலின் ஆசிரியர் பிஆர்.சந்திரன் அவர்கள் தனது புத்தகத்தில் ஆதாரங்களுடன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் கவர்னர் ரோசையா வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருது, அகில இந்திய மகாத்மா காந்தி சமூக நலப்பேரவை சார்பாக வழங்கிய பாராட்டு சான்றிதழ். திருவள்ளுவர் தமிழ் மன்றம் சிறப்பு விருது, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, கர்நாடகா பல்கலைக்கழகங்களில் மூத்த நிருபரான இவருக்கு வழங்கப்பட்ட கவுரவ விருதுகள் என பட்டியல் ஒருபுறம் நீண்டு கொண்டிருக்க தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட் துணைத்தலைவராகவும் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பத்திரிக்கையாளராக பணியாற்றி அதன் மூலம் கிடைக்கும் வருவாயிலேயே தனது அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்து வரும் தியாகி லெட்சுமணன், விடுதலைப்போராட்ட தியாகிகளுக்கான பென்ஷனைக்கூட வேண்டாமென மறுத்து, சிறந்த தேசபக்தராக நம்முன் வாழ்ந்து வருவது நமக்கு பெருமையே!
தியாகி சூறாவளி லெட்சுமணன் அவர்களது சுதந்திர போராட்ட நினைவுகள் இங்கே சிறு தொகுப்பாக பகிரப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் 1927ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் நாள் பொன்னையா – பெரியநாயகி தம்பதிகளுக்கு மூத்த மகனாக பிறந்தார் லெட்சுமணன். தனது 15 ஆவது வயது முதல் தமிழ் புத்தகங்கள், கட்டுரைகளை ஆர்வமுடன் படிக்கத் தொடங்கினார். அப்பொழுது வெளிவந்த சுதேசமித்திரன் வாயிலாக போராட்ட குணம் தொற்றிக் கொண்டது லெட்சுமணனுக்கு. அதிலிருந்தே ஆங்காங்கே போராட்டங்களில் பங்கெடுக்கத் தொடங்கியுள்ளார். 1942 ஆம் ஆண்டு தனது 15வது வயதில் பள்ளிக்குச் சென்று திரும்பும் வழியில் தேவகோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள தியாகிகள் பூங்காவில் வெள்ளையர்களுக்கு எதிராக நடைபெற்ற ஆகஸ்ட் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளார். அந்நேரத்தில் அங்கு வந்த ஆங்கிலேய அலுவலர்கள் கூட்டத்தை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டதில் 27 பேர் கொல்லப்பட்டனர். அந்த துப்பாக்கி சூட்டில் குண்டடிப்பட்டு காயமடைந்து உயிர் தப்பியுள்ளார். இவ்வாறு பல இன்னுயிர்களை இழந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் சிறையில் வாடி பெற்றுக் கொடுத்த சுதந்திரத்தின் பெருமை சிதறடிக்கப்பட்டுள்ளதாக இன்றளவும் கண்ணீர் மல்க கூறுபவர்.
சுதந்திர தாகத்துடன் சூறாவளியாய் சுற்றித்திரிந்த அவருக்கு வீட்டில் கிடைத்த பரிசு தண்டச்சோறு, வெட்டிப்பய போன்ற கடுமையான வார்த்தைகள் தான். ஆனால் அவரது சுதந்திர வேட்கைக்கு முன் அந்த கடுஞ்சொற்களால் தன் மனதை சிறிதும் அசைக்க முடியாது என புன்னகை பூக்க சொல்பவர். ஆனால், எந்த கனவுடன் சுதந்திரம் பெற வெள்ளையர்களை எதிர்கொண்டோமோ, சுதந்திரத்திற்கு பின் அக்கனவு சுக்குநூறாகி போனதென இன்றளவும் கவலைக் கொள்கிறார் லெட்சுமணன்.
இந்திய நாடு எந்த தலைவர்களின் செயல்பட்டாலும் முன்னேறவில்லை என துணிந்து குற்றம் சுமத்தும் இவர், போராடிப்பெற்ற சுதந்திரத்தால் நம் நாட்டில் அனைவருக்கும் ஆரம்பக்கல்வியிலிருந்து பட்டமேற்படிப்பு வரை ஒரே தரமான இலவச கல்வி, பணமில்லா மருத்துவம், வந்தாரை வாழ வைக்கும் தமிழகத்தின் மொழி வளர்ச்சி, நாளைய நாட்டின் தலைவர்களாம் இளைஞர்களின் வளர்ச்சி, அவர்களது எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையிலான வேலைவாய்ப்பு என அதீத ஆசையில் மிதந்த லெட்சுமணனுக்கு எல்லாம் வெறும் கனவாகியது தாங்க முடியாத இழப்பு என கவலைக் கொள்கிறார்.
போராட்டத்திற்கு பின் கிடைத்த சுதந்திரம் தனக்கொரு மிகப்பெரிய புத்துணர்ச்சியை அளித்ததாக மகிழ்வுடன் இன்றளவும் தெரிவிக்கும் லெட்சுமணன், அந்த மகிழ்ச்சி சிறிது காலம் கூட நிலைக்கவில்லை என்றும், சுதந்திரம் அடைந்த பிறகு எந்த தலைவர்களும் தங்களைப் போன்ற கீழ் மட்ட தொண்டர்களை மதிக்கவில்லை என்றும், இதனால் தொண்டர்களுக்கு வறுமையே வாழ்க்கையாகிவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.
தான் நினைத்த சுதந்திரம் இதுவல்ல என்று கூறும் லட்சுமணன், தொண்டர்களை மதிக்காமல், கடமைக்காக தியாகத்திற்கு விலை வைத்து அவர்கள் கொடுக்கும் பென்ஷனை நாம் ஏன் பெற வேண்டும் என்ற வைராக்கியத்தோடு அரசு தியாகிகளுக்கு மாதந்தோறும் வழங்கும் பென்ஷனையை வேண்டாம் என்று நிராகரித்துள்ளார். தற்போது பத்திரிக்கையாளனுக்குரிய பென்ஷன் தான் தனது வாழ்வாதாரம் எனக் கூறும் லெட்சுமணன், நாட்டின் ஜீவாதாரமான நதி நீர் இணைப்பு ஒன்று தான் தனது வாழ்நாள் கனவு என்றும் காலத்தின் ஓட்டத்திற்கேற்ப தனது ஆசையை வெளிப்படுத்துகிறார்.
தொகுப்பு
திருமதி. இரா. ஜான்சிராணி கண்ணன்
Sooravali P Lakshmanan
ReplyDelete