Monday, May 16, 2016

வெற்றி ?

வெற்றி பெறுவது என்பது வேறு. பிறரைத் தோற்கடிப்பது என்பது வேறு. இதற்கிடையில் உள்ள வித்தியாசத்தைப் பலர் உணர்வதில்லை. பிறரைத் தோற்கடிப்பது சுலபம். ஆனால் நாம் வெற்றி பெறுவது என்பது கடினமான காரியம். இந்த இரண்டையும் ஓன்றாகக் குழப்பிக் கொண்டவர்கள் பலர்.

இன்றைக்கு நம்முடைய அரசியல்வாதிகள் பலர், பிறரைத் தோற்கடித்த விஷயத்தை பிறரது தோல்வியை தங்கள் வெற்றி விழாவாகக் கொண்டாடுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது.

நாம் அறிவாளியாவது என்பது வேறு. பிறரை முட்டாளாக்குவது என்பது வேறு. இரண்டும் ஓன்றாகிவிட முடியுமா? எத்தனை பேரை வேண்டுமானாலும் சுலபமாக நீங்கள் முட்டாளாக்கிவிட முடியும். ஆனால் நீங்கள் அறிவாளி ஆவது சுலபமான காரியம் இல்லை. முயற்சி, திறமை, இப்படி எவ்வளவோ அதற்குத் தேவை! உதாரணம் சொல்லுகிறேன்.

பள்ளிக் கூடத்தில் படிக்கும் பத்து வயதுப் பெண், தன் முப்பத்து ஒன்று வயது அப்பாவிடம் வந்து நின்றாள். விழிகளை அகல விரித்தபடி அப்பாவிடம் ஓரு புதிர் போட்டாள். 'அப்பா... ஒரு குட்டிக் குரங்கு... தனியா மரத்துல உட்கார்ந்து இருக்கு... அந்த மரத்துக்குக் கீழே திடீர்னு வெள்ளம் வந்துடுச்சு... காட்டாத்து வெள்ளம்... திரும்பின பக்கம் எல்லாம் ஓடுது... அந்தக் குட்டிக் குரங்குக்கு நீந்தத் தெரியாது... பயங்கர வெள்ளம் கீழே... அது எப்படித் தப்பிக்கும், சொல்லு?' என்று அப்பாவை அசர வைத்தாள் மகள்.

அரை மணி நேரம் மாறி மாறி யோசித்த அப்பா முடிவில் தன் தோல்வியை ஒப்புக் கொண்டார். 'அந்தக் குட்டிக் குரங்கு எப்படித் தப்பிக்கும்... தெரியலை, நீயே சொல்லு' என்றார் மகளிடம். ';... இவ்வளவு பெரிய குரங்கு உனக்கே தெரியலை... அந்தக் குட்டிக் குரங்குக்கு மட்டும் எப்படி தெரியும்?' என்று கையை அப்பா முகத்துக்கு நேரே ஆட்டிவிட்டுச் சிட்டாய்ப் பறந்தாள் அந்தச் சின்னப் பெண்.

அவளிடத்திலும் கேள்விக்கு விடையில்லை. ஆனால் அப்பாவைக் குரங்கு என்று கேலி செய்ய, முட்டாளாக்க அரை மணி நேரம் செலவிட்டாள் அந்தச் சின்னப் பெண். இன்றைக்கு இந்தச் சின்னத்தனம்தான் எங்கும் நடக்கிறது.

பிறரை வாய் மூடச் செய்வது... செயலிழக்கச் செய்வது... தோற்றுப் போகச் செய்வது... ஆளவிடாமல் தடுப்பது... முன்னேற முடியாதபடி முதுகை முறிப்பது... இப்படிப் பிறரைத் தோற்கடிப்பதைத் தம்முடைய வெற்றியாகக் கருதுகிறார்கள்.

இந்தத் தவறுதலான எண்ணத்தில் இருந்து தயவு செய்து வெளியே வாருங்கள். பிறரைத் தோற்கடிப்பது இலட்சியமல்ல... நமது வெற்றியே நமது குறிக்கோள்... என்கிற தெளிவு இருக்க வேண்டும். நாம் வெற்றி பெற்றால் நமக்கு எதிரிகள் இருக்கமாட்டார்கள். பிறரைத் தோற்கடித்தால் நாம் ஓரு நிரந்தர எதிரியை ஏற்படுத்திக் கொள்கிறோம். நாம் யாரைத் தோற்கடித்தாலும் அவர் நம்மைத் தோற்கடிக்கவே தமது எஞ்சிய காலம் முழுவதையும் செலவிடுகிறார்.

பிறரைத் தோற்கடிப்பது நமது நோக்கம் அல்ல என்பதை இன்னொரு கோணத்தில் பார்ப்போம். ஒரு குழந்தையுடன் கடைவீதிக்குப் போகிறாள் அம்மா. அங்கு ஏதோ ஒரு தின்பண்டம் வேண்டும் என்று குழந்தை அழுதது. வாங்கித் தராமல் அம்மா பிடிவாதமாக வந்துவிட்டாள். குழந்தை முகம் வாடிவிட்டது.

உடனே அம்மாவிற்கு மனம் கேட்கவில்லை. மீண்டும் கடைவீதிக்குப் போய் குழந்தை கேட்ட தின்பண்டத்தை வாங்கி வந்து குழந்தைக்குக் கொடுக்கிறாள். அப்போது சில குழந்தைகள் மகிழ்ச்சியாக வாங்கிக்கொள்ளும்.

சில குழந்தைகளோ வம்பு செய்யும். தூக்கி எறியும். அது கேட்டபோது கிடைக்காததால், கிடைக்கிறபோது வேண்டியதில்லை என்று புறக்கணிக்கும். அம்மா கெஞ்சுவாள். தனக்குத் தராமல் துன்புறுத்திய தாயைப் பழிவாங்கும் நோக்கில் தின்னாமல் துன்புறுத்தும் பிள்ளைகளும் உண்டு. நீங்கள் எந்த வகை யோசித்ததுண்டா?

கேட்டது கிடைப்பது வெற்றி. கொஞ்சம் முன் பின்னாகக் கிடைத்தாலும் வெற்றி வெற்றிதான். ஆனால் அந்த வெற்றியை அனுபவிக்க முடியாதபடி சிறுபிள்ளைத்தனமான அகங்காரத்தால் பிறரைத் தோற்கடிப்பவர் உண்டு.

வளர்ந்த பிறகும் இந்தக் குணம் பலரை விடுவதில்லை. கணவனிடம் புடவை கேட்பார்கள்... முதலில் மறுத்துவிட்டுப் பிறகு மனம் மாறிக் கணவன் வாங்கிக் கொடுத்தால் உடுத்தமாட்டேன் என்று சிலர் பிடிவாதமாக மறுத்துவிடுவார்கள். அவனை மனம் நோகச் செய்து தோற்கடிப்பதில் அலாதியான மகிழ்ச்சி அடைவார்கள்.

நாம் நோக்கத்தில் தெளிவாக இருந்தால் இந்தத் தவறு நடக்காது. நமது வெற்றிதான் முக்கியம். பிறரைத் தோற்கடிப்பதில் நமக்கு என்ன நன்மை விளையப் போகிறது? அதனால்தான் பகை வளர்கிறது. தாங்கள் வெற்றி பெறுவதற்காகப் பயன்படுத்தினால் தேசம் வளர்ச்சியுறும். பிறரைத் தோற்கடிப்பது வெற்றி அல்ல! நாம் வெற்றி பெறுவதே வெற்றி என்கிற துல்லியமான வேறுபாட்டைப் புரிந்து கொண்டால் வெற்றி நிச்சயம்!

குறிப்பு: இந்த தகவல்களில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களில் ஒருசில அல்லது எல்லாமே உங்களிடம் இருக்குமேயானால் நிதானமாக மனதை ஒருமைபடுத்தி ஒன்றிற்கு மேற்பட்ட தடவைகள் படித்து பாருங்கள் உங்களின் தவறு விளங்கும், அதனை திருத்திக் கொண்டு உண்மையான வெற்றியை அடைந்து கொள்ள வழிகிடைக்கும். அதுவல்லாமல் ஆழ்ந்த மற்றும் பரந்த சிந்தனையில்லாமல் படிப்பீர்களேயானால் வெற்றி அடைய முயற்சிப்பதை விட்டுவிட்டு பழைய நிலையைவிட மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படுவீர்கள் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

வாழ்க்கையில் வெற்றி பெற 15 வழிமுறைகள்

- பிடித்த காரியத்தையே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள். நீங்கள் செய்யும் காரியத்தை பிடித்ததாக மாற்றிக் கொள்ளுங்கள். விரைவில் நீங்களே ஒரு மாற்றத்தை உணர்வீர்கள்.

- வாழ்க்கையில் எதற்கும் பயப்படாதீர்கள். வேலை பாதுகாப்பு என்பதை கருதி ஒரே இடத்தில் இருந்து விடாதீர்கள். புதிய முயற்சிகளால் மட்டுமே முன்னேற்றத்தை உணர முடியும்.
- மற்றவர்களையும் உங்களுக்காக உழைக்க வைக்கும் புத்திசாலித்தனம் இருந்தால் மட்டுமே நல்ல ஒரு leader ஆகா முடியும் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள்.
- கீழே விழுவது வேகமாக எழுவதற்காகவே, அதனால் விழுவதைப்பற்றி கவலை படாதீர்கள். அது வெற்றியின் ஏணிப்படி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
- வெற்றிக்கு நேரம் அவசியம் என்பதால், நேரத்தை உருப்படியாக செலவிட தெரிந்து கொள்ளுங்கள்.
- எதற்கும் கவலை படுவதை விட்டு விட்டு எப்பொழுதும் பாசிடிவ் எண்ணங்களுடன் இருங்கள்.
- வெற்றிக்கான முதல் சாவி உழைப்பு தான். அதனால் தினமும் குறைந்தது 10 முதல் 12 மணி நேரம் உழையுங்கள்.
- முடியாது, கஷ்டம், நடக்காது போன்ற சொற்களை உங்கள் அகராதியில் இருந்து தூக்கி எறியுங்கள்.
- வாய்ப்புக்களை தவற விடாதீர்கள். சரியான நேரத்தில் நன்றாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
- நீங்கள் என்னதான் உழைத்தாலும் சில நேரங்களில் அதிர்ஷ்டம் தேவை. இறைவனை நம்புங்கள். உங்கள் வெற்றியினை இறைவனுக்கு காணிக்கை ஆக்குங்கள்.
- வாழ்க்கையில் சந்தோஷம் என்பது பணத்தினால் மட்டுமே வருவது இல்லை. அதனால், உலகில் அனைத்து விஷயங்களையும் நேசிக்க கற்றுக் கொள்ளுங்கள்.
- நாளை பார்க்கலாம் என்று எதனையும் தள்ளிப் போடாதீர்கள். அது நடக்காமலே கூட போய்விடக்கூடும்.
- துணிச்சலான முடிவுகளை எடுக்கக் கூடிய தைரியம் வேண்டும்.
- வெற்றி உடனடியாக கிடைத்து விடாது. ஒவ்வொரு படியாக, மெதுவாக ஆனால் உறுதியாக முன்னேறுங்கள்.
- தொழிலில் பல சிக்கல்களும் இடயூருகலும் வரும் என்றாலும் கூட, நீங்கள் அஞ்சாமல் மன தைரியத்துடன் அவற்றை சந்திக்க வேண்டும்.

வெற்றி மொழி

வில்லியம் ஆர்தர் வார்டு

1921 ஆண்டு முதல் 1994 வரை வாழ்ந்த வில்லியம் ஆர்தர் வார்டு அமெரிக்க எழுத்தாளர். தனது ஊக்கமூட்டும் மேற்கோள்களின் மூலம் பெரும் பாராட்டினைப் பெற்றவர். மிகவும் குறிப்பிடத்தக்க அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். இவரது படைப்புக்களான நூற்றுக்கும் மேற்பட்ட கட்டுரைகள் மற்றும் கவிதைகள் பல்வேறு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன. தனது இலக்கிய பங்களிப்பு மற்றும் சாதனைகளுக்காக கவுரவ டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். அமெரிக்கா மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளிலும் இவரது நீதிமொழிகள் புகழ்பெற்றவை.
# கடவுள் இன்று உங்களுக்கு 86,400 விநாடிகளைப் பரிசாக வழங்கியுள்ளார். இதில் ஒரு விநாடியை நன்றி சொல்ல பயன்படுத்தினீர்களா?
# உங்களால் கற்பனை செய்யமுடியும் என்றால், அதை அடையவும் முடியும். உங்களால் கனவு காணமுடியும் என்றால், அதுவாகவே மாறவும் முடியும்.
# இன்றைய நாள் மிகவும் அசாதாரண நாள். ஏனென்றால், இதற்குமுன் இன்றுபோல் நாம் வாழ்ந்ததில்லை, இதற்குப்பின் இன்றுபோல் வாழப்போவதும் இல்லை.
# சாதாரண ஆசிரியர் சொல்கிறார்; நல்ல ஆசிரியர் விளக்குகிறார்; மேம்பட்ட ஆசிரியர் நிரூபிக்கிறார்; மிக உயரிய ஆசிரியர் ஊக்கமளிக்கிறார்.
# நாம் மற்றவர்களிடம் உள்ள சிறந்ததைக் கண்டறிய முற்படும்போது, நம்மிடம் உள்ள சிறந்ததை எப்படியாவது வெளிக்கொணர வேண்டும்.
# ஒரு அன்பான புன்னகை என்பது கருணையின் உலகளாவிய மொழி ஆகிறது.
# ஆர்வம் என்பது கற்றல் என்னும் விளக்கில் உள்ள திரியினைப் போன்றது.
# மன்னிப்பு என்ற ஒன்று இல்லாமல் வாழும் வாழ்க்கை ஒரு சிறைதான்.
# மகிழ்ச்சி என்பது ஒரு உட்புற பணி ஆகும்.
# அவநம்பிக்கை புகார் செய்கின்றது; நம்பிக்கை மாற்றத்தை எதிர்பார்கின்றது; யதார்த்தம் சிக்கலை சரிசெய்கின்றது.
# சிக்கல் தற்காலிகமானது மற்றும் நேரம் சக்தியளிப்பது ஆகிய உண்மைகளை கற்றுக்கொண்டவரே விவேகமானவர்.
# வாய்ப்புகள் என்பவை சூரியோதயம் போன்றவை, நீங்கள் நீண்ட நேரம் காத்திருந்தால் அவற்றை இழக்க நேரிடும்.

வெற்றி மொழி

சோபோக்ளிஸ்


சோபோக்ளிஸ், கிமு 496 முதல் 406 வரையிலான காலத்தை சேர்ந்த பண்டைய கிரேக்க நாடக ஆசிரியர் ஆவார். இவர் தனது வாழ்நாளில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளதாக வரலாற்று ஆதாரங்களின் மூலம் தெரியவந்துள்ளது. இருப்பினும் இவற்றில் ஏழு நாடகங்கள் மட்டுமே இப்பொழுது முழுமையாக கிடைத்துள்ளன. அக்கால விழாக்களில் நடைபெற்ற நாடக போட்டிகளில் அதிக முறை வெற்றிபெற்ற பெருமை இவருக்குண்டு. தன்னுடைய படைப்புகளின் மூலமாக, பாரம்பரிய கிரேக்க நாடக உலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார்.


விரைவான முடிவுகள் அனைத்தும் பாதுகாப்பற்ற முடிவுகளாகவே உள்ளன.

ஒரு சிறிய கருத்து பெரும்பாலும் அதிக ஞானத்தை கொண்டிருக்கின்றது.

ஞானமிக்க சிந்தனை உடையவர்கள் அனைத்து இடங்களிலும் மேம்பட்டவர்களாக இருக்கின்றார்கள்.

ஏழ்மையான மனிதன் கூட மரியாதைகளைப் பெற முடியும்.

மகிழ்ச்சியின் மிகவும் உயர்வான பகுதி ஞானமே.

தீய ஆலோசனை வேகமாகப் பயணிக்கின்றது.

அராஜகத்தை விட அதிக கேடானது வேறு எதுவுமில்லை.

அதிகப்படியாக பேசுவது என்பது ஒரு வகை, சரியான தருணத்தில் பேசுவது என்பது மற்றொரு வகை.

ஏமாற்றி வெற்றி பெறுவதைவிட, நேர்மையான தோல்வியையே நான் விரும்புகிறேன்.

பயனுள்ள எதையாவது கற்றுக்கொள்வதற்கு எப்போதும் விருப்பமாய் இருங்கள்.

துன்பங்கள் இல்லாமல் ஒருபோதும் வெற்றி இல்லை.

தவறான ஆலோசனையை விட மோசமான எதிரி வேறு எதுவுமில்லை.

வெற்றி எப்போதும் முயற்சியை சார்ந்தே இருக்கின்றது.

எந்த செயலையும் செய்யாத ஒருவருக்கு, அதிர்ஷ்டம் எந்த உதவியையும் செய்யாது.

யார் தேடிச்செல்கிறார்களோ அவர்களே கண்டடைகிறார்கள்.

  தியாகி சூறாவளி பொ.லெட்சுமணன் இந்திய விடுதலைக்காக போரிட்ட தியாகிகள் பலர் தமிழகத்தி;ல் இருக்கையில் சிவகங்கை சீமையின் கோட்டையாம் தேவகோட...